நீலம் பரித்த கடல்
...........................................................................................
உடல் முழுதும் பூக்கின்றன புன்னகையின் பூக்கள்
வெறுமையின் பூக்களாய்
தெறித்த கண்ணாடித் துகள்களில்
விரக்தியின் எச்சங்களே மிஞ்சுகின்றன
குருதிக்குழாய்கள் வாயடைத்து
வீரித்துப் புடைக்கின்றன
இருதயம் முழுவதும் நேசத்தழும்புகள்
ஒன்று திரட்டிக் கட்டி
ஆழ்கடலுக்குள் வீசியெறிந்த
ஞாபகப் பிணங்களை
மீண்டுமொரு முறை தோண்டியெடுத்த
நாற்றத்தில் குடல் அழுகிப்போனது
சிறிது சிறிதாய்
விஷம் கலந்து நீலம்
கடல்
அலையடங்கிப்போனது
உன் பிரிவு பற்றிய சில குறிப்புகள்
....................................................................................................
உன் பிரிவின்
நிச்சயத்தை அறிந்திருக்கிறேன்
சில வேளை
அது நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ
இருக்கலாம்
நீ விட்டுச்சென்ற
வாழ்த்துமடலும் மயிலிறகும்
மற்றும் சில ஞாபகக்குறிப்புகளும்
உன் பிரியத்தைவிடவும்
ஆழமான நேசத்தை விடவும்
என்
இருத்தலிற்கான நியாயத்தையும்
தனிமையின் அமானுஷ்யத்தையுமே
நினைக்கின்றன
உன் பிரியமே
எதையும் விட்டுவைக்காதே
எனக்காக
உன் நேசம் மற்றும்
பிரியத்தையும்………….
உன்னைப் பற்றி
...............................................................................................
ஏதாவது எழுத வேண்டும்
உன்னைப் பற்றி
உன் நினைவுகளைப் பற்றி
அது
என் நேசத்தின் எதிரொலி
என்றுகூட நீ நினைக்கலாம்
ஆனாலும்
உன் இதழ்விரித்த சிரிப்பையும்
சிந்திய வர்ணங்களையும் பற்றி
நினைக்கும்போதே
மை முடிந்து போகிறது
என் காலப்பேனாவிற்கு
.........................................................................................